புதுவை குடிமைப்பொருள் வழங்கல் அலுவலகம் முற்றுகை: எம்எல்ஏ உள்பட 50 பாஜகவினர் கைது

புதுவையில் இலவச அரிசி வழங்காதது தொடர்பாக, வெள்ளை அறிக்கையை அரசு வெளியிடக் கோரி, குடிமைப் பொருள்

புதுவையில் இலவச அரிசி வழங்காதது தொடர்பாக, வெள்ளை அறிக்கையை அரசு வெளியிடக் கோரி, குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்ட நியமன எம்எல்ஏ வி.சாமிநாதன் தலைமையிலான பாஜகவினர் 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.
புதுவையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 17 மாதங்களாக இலவச அரிசி வழங்கப்படவில்லை. இலவச அரிசி வழங்குவது தொடர்பாக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல் தராததால் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இலவச அரிசிக்குப் பதிலாக பணமாக குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் உடனடியாக செலுத்த வேண்டும். இல்லாவிடில், போராட்டம் நடத்தப்படும் என பாஜகவினர் அறிவித்திருந்தனர். 
அதன்படி, மாநிலத் தலைவர் வி. சாமிநாதன் எம்எல்ஏ தலைமையில் புதுச்சேரி தட்டாஞ்சாவடி குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை வியாழக்கிழமை பாஜகவினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: ரேஷன் கடைகளில் கடந்த 17 மாதங்களாக இலவச அரிசி வழங்காத நிலையில், அதற்காக ஒதுக்கப்பட்ட பணம் எங்கே போனது? இதுதொடர்பாக புதுவை அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இலவச அரிசிக்கு பதிலாக பணத்தை தீபாவளிக்கு முன்பாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும். தகுதியற்ற குடும்ப அட்டைகளை உடனே ஆய்வு செய்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
போராட்டம் நடத்திய அவர்களை வடக்கு எஸ்பி ஜிந்தா கோதண்டராமன் தலைமையிலான தன்வந்திரி நகர் காவல் துறையினர் தடுத்ததால், போலீஸாருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட வி.சாமிநாதன் எம்எல்ஏ, பாஜக பொதுச்செயலர் ரவிச்சந்திரன், துணைத் தலைவர் ஏம்பலம் ஆர். செல்வம், மகளிரணி கோகிலா உள்ளிட்ட 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com