புதுவையில் விளம்பரப் பதாகைகள் வைக்க தடை விதித்து உத்தரவிட்டிருப்பதாக முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
இது தொடர்பாக புதுச்சேரியில் அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னையில் சாலையோரம் வைக்கப்பட்ட விளம்பரப் பதாகை சரிந்து விழுந்ததில், பெண் ஒருவர் நிலைதடுமாறி விழுந்து, லாரியில் சிக்கி இறந்துள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஆகவே, புதுவையில் இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் இருக்க, சாலையோரம் விளம்பரப் பதாகைகள் வைப்பதை அரசியல் கட்சியினரோ, தனி நபர்களோ தவிர்க்க வேண்டும். பதாகை வைப்பது விதி மீறிய செயல்.
விளம்பரப் பதாகைகள் வைப்பதால் போக்குவரத்தில் பல அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்புள்ளன. ஆகவே, பதாகை வைப்பவர்கள் மீது அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, உள்ளாட்சித் துறை, பொதுப்பணித் துறை அதிகாரிகள் விளம்பரப் பதாகைகள், கட்-அவுட்டுகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
அவற்றை அகற்றுவதற்கான செலவை பதாகை வைத்தவர்களிடமே வசூலிக்க வேண்டும். விளம்பரப் பதாகைகளை அதிகாரிகள் அகற்றாவிட்டால், அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும். இதை உள்ளாட்சித் துறை அமைச்சருடன் கலந்து பேசி முடிவெடுத்துள்ளோம். இந்த உத்தரவு இன்று (வெள்ளிக்கிழமை) முதலே அமலுக்கு வருகிறது.
நகர்ப்புறம், கிராமப் புறங்களில் அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகள் உடனடியாக அகற்றப்படும். நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அனுமதியின்றி எந்த விளம்பரப் பதாகையும் வைக்கக்கூடாது. மீறி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் முதல்வர் நாராயணசாமி.