புதுச்சேரியில் கவரிங் நகையை அடகு வைத்தவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
புதுச்சேரி காமராஜர் நகர் குபேர் வீதியைச் சேர்ந்தவர் நிமிசந்த் ஜெயின் (36). இவர், கவுண்டன்பாளையம் வழுதாவூர் சாலையில் அடகு கடை நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு சனிக்கிழமை காலை வந்த நபர் ஒருவர், மோதிரத்தை அடகு வைத்து ரூ. 17,500 பணம் பெற்றாராம். மோதிரத்தை பரிசோதித்து பார்த்த போது, அது கவரிங் நகை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து நிமிசந்த் ஜெயின், தன்வந்திரி நகர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் போலீஸார், அந்த நபரைப் பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர், கவுண்டன்பாளையம் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த சக்தி (40) என்பதும், பொற்கொல்லரான அவர், கவரிங் நகையில் தங்க முலாம் பூசி, கடையில் அடகு வைத்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, போலீஸார் சக்தியை கைது செய்து அவரிடமிருந்து 5 கவரிங் மோதிரங்கள், ரூ. 17,500 ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனர்.