பாகூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் போலீஸாருடன் மாட்டுவண்டித் தொழிலாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி பாகூர் காவல் நிலையத்தில் மாட்டுவண்டித் தொழிலாளர்களுடன் போலீஸாரின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பாகூர் காவல் ஆய்வாளர் கெளதம் சிவகணேஷ் தலைமை வகித்தார். காவல் உதவி ஆய்வாளர்கள் விஜயகுமார், தன்வந்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாட்டுவண்டித் தொழிலாளர்கள் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார் பேசுகையில், தென்பெண்ணை ஆற்றில் மணல் எடுப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மீறுவோர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பின்னர், பேசிய மாட்டுவண்டித் தொழிலாளர்கள், எங்களுக்கு மாட்டுவண்டித் தொழிலைவிட்டால் வேறு எந்தத் தொழிலும் இல்லை. மாட்டுவண்டித் தொழிலாளர்களுக்கு தனி மணல் குவாரி அமைக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல் துறையினர் மாட்டுவண்டித் தொழிலாளர்களை மட்டுமே குறிவைத்து கைது செய்கின்றனர்.
சோரியாங்குப்பம் பகுதியில் மாட்டுவண்டிக்கான மணல் குவாரி அமைக்கப்படும் எனக் அரசு கூறியிருந்தது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தத் தொழிலை மட்டுமே நம்பியுள்ள மாட்டுவண்டித் தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடுகின்றனர். மாட்டுவண்டித் தொழிலாளர்கள் மீது ஏவப்பட்ட குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தை அரசு உடனே நீக்க வேண்டும் எனக் கூறி, அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இவர்களை போலீஸார் சமாதானப்படுத்தினர்.