முத்தரையர்பாளையத்தில் வாடகை கொடுக்காததால், மளிகை கடையின் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த பொருள்களை வேனில் அள்ளிச் சென்ற இருவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன் மனைவி விஜயலட்சுமி (56). இவர், புதுவை வழுதாவூர் சாலையில் முத்தரையர்பாளையத்தில் பெரியசாமி என்பவருக்குச் சொந்தமான இடத்தில் வாடகைக்கு மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 4 மாதங்களாக வாடகையைக் கொடுக்கவில்லையாம். இதனால், கட்டடத்தின் உரிமையாளர் பெரியசாமி கடையை காலி செய்யுமாறு கூறினாராம். ஆனால், விஜயலட்சுமி இதை ஏற்கவில்லையாம். இதுதொடர்பான பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லையாம்.
இதனால், பெரியசாமியின் மருமகன் பிரகாஷ் தனது நண்பர்களான சொக்கநாதன்பேட்டையைச் சேர்ந்த ஐயப்பன் (27), கதிர்காமத்தைச் சேர்ந்த தேவா (42) உள்ளிட்ட 6 பேருடன் சனிக்கிழமை இரவு விஜயலட்சுமியின் கடைக்குச் சென்று, கடையின் பூட்டை உடைத்து, உள்ள இருந்த பொருள்களை ஒரு வேனில் ஏற்றினாராம்.
இதுகுறித்து விஜயலட்சுமி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். அதன் பேரில், அங்கு வந்த போலீஸார், மளிகைக் கடையில் இருந்த பொருள்களை வேனில் ஏற்றிய ஐயப்பன், தேவா ஆகிய இருவரைப் பிடித்தனர். மற்றவர்கள் தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து மளிகைக் கடையில் திருடியதாக வழக்குப் பதிந்த போலீஸார், ஐயப்பன், தேவா ஆகிய இருவரையும் கைது செய்தனர். தப்பியோடிய 4 பேரைத் தேடி வருகின்றனர்.