புதுச்சேரி: சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான இலக்கியத் திருவிழாவில் புதுவை முதல்வர் வே.நாராயணசாமி பங்கேற்கக் கூடாது என்று புதுவை எழுத்தாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து முதல்வர் நாராயணசாமியிடம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் எழுத்தாளர்கள், கலைஞர்கள் தங்களின் கையெப்பம் இட்டு அளித்த கோரிக்கை மனு விவரம்:
புதுச்சேரியில் கடந்த ஆண்டு இலக்கியத் திருவிழா என்ற பெயரில் ஆளுநர் மாளிகையின் ஆதரவுடன் ஒரு குழு வகுப்புவாத வெறியை புதுச்சேரியில் விதைக்க முயற்சி செய்தது. இடதுசாரி அரசியல் இயக்கங்களும், முற்போக்கு கலை இலக்கிய அமைப்புகளும் மேற்கொண்ட நடவடிக்கையால் முதல்வர் பங்கேற்பதும், அலையன்ஸ் பிரான்சிஸ், பிரான்ஸ் தூதரகம் ஆகியவற்றின் பங்களிப்பும் தவிர்க்கப்பட்டது.
நிகழாண்டு மீண்டும் அதே குழு செப். 27 முதல் 29-ஆம் தேதி வரை தனியார் விடுதியில் இலக்கியத் திருவிழாவை நடத்தவிருக்கிறது. அதில், வகுப்புவாத இயக்கங்களின் தேசிய பொறுப்பாளர்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஆளுநர் மாளிகையின் மறைமுக ஆதரவும் உள்ளது.
இந்த நிகழ்ச்சி நிரலில் முதல்வர் பங்கேற்க உள்ளதாகத் தெரிகிறது. எனவே, புதுச்சேரி கலை இலக்கிய சமூக நல அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, புதுவை முதல்வர் இந்த விழாவில் பங்கேற்கபதைத் தவிர்க்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவில், சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன், தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் சு.ராமச்சந்திரன், புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றத் தலைவர் எல்லை.சிவக்குமார், செயலர் பாலகங்காதரன், தனித்தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த முனைவர்
க.தமிழமல்லன், அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகப் பொதுச் செயலர் ஜீவானந்தம், புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தலைவர் வீர.அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.