புதுச்சேரி: காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுவை மாநிலக் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் சங்கம் சார்பில் தட்டாஞ்சாவடியில் உள்ள கூட்டுறவுத் துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது.
புதுவை மாநிலக் கூட்டுறவுத் துறை அதிகாரிகளைப் பழிவாங்குதல் மற்றும் விதிமுறைகளை மீறி, கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குநரை நியமித்ததைக் கண்டித்தும், காலியாக உள்ள 47 இளநிலை ஆய்வாளர்கள் பணிகளை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி மாநிலக் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் சங்கம் சார்பில், கடந்த சில மாதங்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஆளுநரிடம் மனுவும் அளிக்கப்பட்டது. ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனிடையே, கடந்த ஒரு மாதமாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தங்களது போராட்டத்தைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். ஆனாலும், கோரிக்கைகள் மீது எந்தவித நடவடிக்கையும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், 33 -ஆவது நாளாக திங்கள்கிழமையும் கூட்டுறவுத் துறைப் பதிவாளர் அலுவலகத்தில் அதிகாரிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு புதுச்சேரி மாநிலக் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் சங்கத் தலைவர் இந்திரமோகன், செயலர் மேகநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.