புதுச்சேரியில் இருந்து தமிழகப் பகுதிக்கு கடத்தப்பட இருந்த 100 லிட்டர் சாராயத்தை போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு சாராயம் கடத்தப்பட இருப்பதாக பாகூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார், காவலர்கள் அருண், முரளி ஆகியோர் பாகூர் அருகே சித்தேரி அணைக்கட்டு பகுதியில் சனிக்கிழமை தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த மோட்டார் பைக்கை மறித்து சோதனை செய்த போது, அதில் வந்தவர் மூட்டைகளை அங்கேயே போட்டுவிட்டு மோட்டார் பைக்குடன் தப்பி சென்றுவிட்டார். சந்தேகமடைந்த போலீஸார், அந்த மூட்டையைப் பிரித்து பார்த்த போது, அதில் சாராயம் இருந்தது தெரிய வந்தது.
தண்ணீர் பாக்கெட்கள் போல, பாலித்தீன் பைகளில் சாராயத்தை அடைத்து சாக்கு மூட்டையில் கடத்திச் சென்றதும் தெரிய வந்தது. மொத்தம் 100 லிட்டர் சாராயம் அதில் இருந்தது. இதன் மதிப்பு ரூ. 25 ஆயிரம் இருக்கும்.
இதையடுத்து, சாராயத்தைப் பறிமுதல் செய்த போலீஸார், அதை கலால் துறையிடம் ஒப்படைத்தனர்.