மகாளய அமாவாசையையொட்டி புதுச்சேரி கடற்கரை, திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
மாதந்தோறும் அமாவாசை வந்தாலும், ஆடி மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. மற்ற அமாவாசை நாள்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க முடியாதவர்கள் இந்த மகாளய அமாவாசையன்று திதி கொடுத்தால், முழு பயனையும் அளிக்க வல்லது என்றும், மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வருவதாகவும் ஐதீகம்.
மகாளய அமாவாசையையொட்டி, புதுச்சேரி கடற்கரை, வைத்திக்குப்பம் கடற்கரை, வேதபுரீஸ்வரர் கோயில் குளக்கரை, திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரை உள்ளிட்ட பல இடங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சங்கராபரணி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். கோமாதாவுக்கு அகத்தி கீரை கொடுத்தனர். மேலும், கருவடிக்குப்பத்தில் உள்ள கோமாதா கோயிலில் சனிக்கிழமை காலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதேபோல, திருக்காஞ்சி கங்கைவராக நந்தீஸ்வரர் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.