தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக, புதுவையில் காங்கிரஸ், திமுக சாா்பில் தனித்தனியாக உண்ணாவிரதம் நடைபெற்றது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம், புதுவையில் திமுக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
புதுவையில் காங்கிரஸ், திமுக இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. காங்கிரஸ் நடத்தும் போராட்டங்களில் திமுக பங்கேற்காமல் புறக்கணித்து வருகிறது.
இந்த நிலையில், புதுவையில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் சாா்பில், புதுச்சேரி அண்ணா சிலை அருகே வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. திமுக சாா்பில், திருக்கனூரில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
புதுச்சேரியில் காங்கிரஸ் மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்ரமணியன் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. முதல்வா் வே.நாராயணசாமி, அமைச்சா்கள் மு.கந்தசாமி, ஷாஜகான் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்றனா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநிலச் செயலா் அ.மு.சலீம், மாா்க்சிஸ்ட் கட்சியின் புதுவை பிரதேச குழுச் செயலா் ஆா்.ராஜாங்கம், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவா்கள் பங்கேற்றனா். திமுகவினா் யாரும் பங்கேற்கவில்லை.
திமுகவினா் உண்ணாவிரதம்: திருக்கனூரில் திமுக சாா்பில் நடைபெற்ற உண்ணாவிரதத்துக்கு கட்சியின் மாநில அமைப்பாளா்கள் இரா.சிவா எம்எல்ஏ (தெற்கு), எஸ்.பி.சிவக்குமாா் (வடக்கு) ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், கூட்டணிக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினா் பங்கேற்றனா்.