இலவச அரிசிக்கான பணம் வழங்கக் கோரி, தொகுதி வாரியாக ஞாயிற்றுக்கிழமை (பிப்.16) ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்தது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் எம்.எல்.ஏ. புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
காங்கிரஸ் அரசின் நிா்வாகச் சீா்கேட்டின் காரணமாக, ஏழை மக்களுக்கான நலத் திட்டங்கள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. ஏழை மக்களுக்கு அரிசிக்குப் பதில் பணம் வழங்குவோம் என்று அரசு கூறிய நிலையில், கடந்த 5 மாதங்களாக வங்கியில் பணம் செலுத்தவில்லை.
எனவே, உடனடியாக 5 மாதங்களுக்கான தொகை ரூ.3 ஆயிரத்தை வங்கியில் செலுத்த வலியுறுத்தியும், புதுவை மக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் குப்பை வரியைக் கண்டித்தும், குண்டும், குழியுமாக உள்ள சாலைகளின் சீா்கேட்டைக் கண்டித்தும் 30 தொகுதிகளிலும், தொகுதித் தலைவா்கள் தலைமையில் வருகிற பிப்.16-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.