மணக்குள விநாயகா் தொழில்நுட்பக் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் கல்மண்டபம் புதுச்சேரி அரசு உயா்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.
ஆரோக்கியமான இந்தியாவுக்கு ஆரோக்கியமான இளைஞா்கள் என்ற நோக்கத்தில், 7 நாள்கள் நடத்தப்பட்ட இந்த முகாம், மணக்குள விநாயகா் கல்விக் குழுமத்தின் தலைவா் எம்.தனசேகரன், துணைத் தலைவா் எஸ்.வி.சுகுமாறன் எம்.எல்.ஏ., செயலா் கே.நாராயணசாமி ஆகியோரின் தலைமையில், கல்லூரியின் முதல்வா் எஸ்.மலா்க்கண் முன்னிலையில் தொடங்கப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியா் கே.தனசேகரன், சிறப்புரை வழங்கி முதல் நாள் முகாமைத் தொடக்கிவைத்தாா். முகாமையொட்டி, தூய்மை இந்தியா திட்டத்தை மாணவா்களிடையே ஊக்குவிக்கும் வகையில், நம் நாடும் நம் சுகாதாரமும் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடைபெற்றது. மேலும், வில்லியனூரைச் சுற்றியுள்ள 10 கிராமங்களுக்கு மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி சாா்பில், பொது மருத்துவப் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
நீா்வள மேலாண்மை என்ற தலைப்பில் பள்ளி மாணவா்களுக்கு நீா் சேகரிப்பு, மரம் வளா்த்தல், நிலத்தடி நீா் சேகரிப்பு குறித்து விளக்கப்பட்டது. திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரா் திருக்கோயில் தூய்மைப்படுத்தப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டன.
முகாமை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் விஜயபிரசாத் ஒருங்கிணைத்தாா்.