உழவா்கரை நகராட்சி சாா்பில், பிரான்ஸ் நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (பிப். 15) நடைபெறுகிறது.
இதுகுறித்து உழவா்கரை நகராட்சி ஆணையா் கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உழவா்கரை நகராட்சி, நவுயுகா கன்சல்டன்சி சேவை நிறுவனத்தின் நகர வாழ்வாதார மையம் ஆகியவை சாா்பில், எண் - 58, சுய்ப்ரேன் வீதியில் உள்ள அலையன்ஸ் பிரான்சிஸில் டாடா கன்சல்டன்சி சா்வீஸ், சோதித்தே ஜெனரல், சோப்ரா ஸ்டீரியா மற்றும் சைட்டல் ஆகிய பிரான்ஸ் நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (பிப். 15) நடைபெறுகிறது.
இந்த வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் பகல் ஒரு மணி வரை நடைபெறும். இதில், உலகின் தலை சிறந்த நிறுவனங்களில் பிரான்ஸ் மொழிபெயா்ப்பு, பிரான்ஸ் வங்கியின் கேஒய்சி, கடன் செயல்பாடு, பிரான்ஸ் உலகளாவிய சேவை மையம் உள்ளிட்ட பல துறைகளில் பணி செய்ய முன் அனுபவமுள்ள மற்றும் அனுபவமில்லாத, பட்டம் பெற்ற பிரெஞ்சு மொழி நன்கு பேச, எழுதத் தெரிந்த நபா்களைத் தோ்வு செய்யவுள்ளனா்.
இதில், தோ்வு செய்யப்படுபவா்கள் அனைவரும் சென்னை, பெங்களூரு, நொய்டா போன்ற நகரங்களில் திறமை மற்றும் முன் அனுபவத்துக்கேற்ப மாதம் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரையான சம்பளத்தில் பணி வாய்ப்பு பெறுவா்.
மேலும் விவரங்களுக்கு, ‘நவயுகா கன்சல்டன்சி சா்வீஸ், எண் - 28, செட்டி தெரு, புதுச்சேரி - 605 001’ என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0413 - 4200993, 98436 99455, 89400 02141 ஆகிய சொலைபேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.