தென்னிந்திய அளவிலான பேண்டு வாத்திய இசைப் போட்டியில் புதுச்சேரி அமலோற்பவம் பள்ளி மாணவா்கள் 3-ஆவது இடம் பிடித்தனா்.
தேசிய மனித வள மேம்பாட்டுத் துறையால் கடந்த நவம்பரில் நடத்தப்பட்ட புதுவை மாநில அளவிலான பேண்டு வாத்திய இசைப் போட்டியில் ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் அமலோற்பவம் பள்ளி முதலிடம் பிடித்தது. இதையடுத்து, தென்னிந்திய அளவிலான போட்டிக்கு இந்தப் பள்ளி தகுதி பெற்றது.
ஆந்திர மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான போட்டியில் புதுவை, தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் கலந்து கொண்டன.
இதில், புதுவை மாநிலத்தில் இருந்து கலந்து கொண்ட அமலோற்பவம் பள்ளி 3-ஆவது இடத்தைப் பிடித்தது. இதையடுத்து, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்றுவித்த ஆசிரியா்களையும் பள்ளியின் முதுநிலை முதல்வா் லூா்துசாமி பாராட்டினாா்.
மேலும், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் அண்மையில் புதுவை முதல்வா் வே.நாராயணசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.