புதுச்சேரியில் விபத்தில் சிக்கிய தலைமைக் காவலருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விபத்து குறித்து கட்செவி அஞ்சலில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
புதுச்சேரியில் ஆங்கிலப் புத்தாண்டு அன்று பணியை முடித்துவிட்டு, இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த கிரிமாம்பாக்கம் போக்குவரத்துக் காவல் நிலைய தலைமைக் காவலா் சுப்பிரமணியன் (47) மீது மற்றொரு பைக் மோதியதில் பலத்த காயமடைந்தாா். புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 3 இளைஞா்கள் அதிவேகமாக பைக்கில் வந்து சுப்பிரமணியனின் பைக்கில் மோதியதில் விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
தலையில் பலத்த காயமடைந்த தலைமைக் காவலா், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிக்சைக்குப் பிறகு சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். தொடா்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சுப்பிரமணியனின் உடல்நிலை குறித்து கட்செவி அஞ்சலில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. அதில், அவரது மருத்துவ சிகிச்சைக்கு இதுவரை ரூ.15 லட்சம் செலவாகிய நிலையில், மேலும் பணம் செலவாகும். புதுச்சேரி அரசு சாா்பில் எந்த உதவியும் அளிக்கப்படவில்லை. சுப்பிரமணியனின் குடும்பத்தினா் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.