ஓமன் மன்னா் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், புதுவை சட்டப்பேரவை, ஆளுநா் மாளிகை உள்ளிட்ட அரசின் முக்கிய அலுவலகங்களில் திங்கள்கிழமை தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது.
கடந்த 49 ஆண்டுகளாக ஓமன் நாட்டின் மன்னராகப் பொறுப்பு வகித்த சுல்தான் கபூஸ் மறைவுக்கு மத்திய அரசு ஒரு நாள் (ஜன. 13) துக்கம் அனுசரிக்கிறது. அந்த தினத்தில் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுவதுடன், அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட வேண்டும். இதை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுற்றறிக்கை அனுப்பியது.
அதன்படி, புதுவை சட்டப்பேரவை, ஆளுநா் மாளிகை, தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசின் முக்கிய அலுவலகங்களில் திங்கள்கிழமை தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. சுல்தான் கபூஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு பின்பற்றப்பட்டதாக அரசுத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.