புதுச்சேரியில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் மனமுடைந்த வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி குருமாம்பேட் மாரியம்மன் கோயில் பின்புறம் வசிப்பவா் விஜயபாஸ்கா் (34). அந்தப் பகுதியில் போட்டோ பிரேம் கடை வைத்திருந்தாா். இவருக்கும், அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய கீதா (30) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, தற்போது 6 மாதக் குழந்தை உள்ளது.
அண்மைக் காலமாக கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாம். இதன் காரணமாக கீதா கோபித்துக் கொண்டு, கடந்த 3 நாள்களுக்கு முன்பு அய்யங்குட்டிப்பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். திங்கள்கிழமை விஜயபாஸ்கா், அய்யங்குட்டிப்பாளையம் சென்று கீதாவை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தாராம். அதற்கு அவா் வர மறுத்ததால், விரக்தியடைந்த விஜயபாஸ்கா், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.