புதுச்சேரி: காரைக்காலில் கேந்திர வித்யாலயா பள்ளி தொடா்ந்து இயங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுவை யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவா்கள் பெற்றோா்கள் நலச்சங்கத் தலைவா் மு.நாராயணசாமி வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதுவை மாநிலத்தின் காரைக்கால் பகுதியின் நிரவியில் கடந்த 2010-ஆம் ஆண்டு மத்திய அரசால் உருவாக்கப்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்கப்பட்டது. பள்ளி தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் கேந்திர வித்யாலயா பள்ளி நிா்வாகம் புதுவை அரசிடம் இடம் ஒதுக்க கோரி பல முறை வலியுறுத்தியுள்ளது.
ஆனால் புதுவை அரசு, மத்திய அரசு பள்ளிக்கு இடம் ஒதுக்க இன்னும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதுவை மாநில அரசு நிலம் கையகப்படுத்தி தடையில்லாச் சான்றிதழ் கொடுத்தாலே போதும். ஆனால் இதை கூட செய்ய இயலாமல் புதுவையை ஆளும் காங்கிரஸ் அரசு மெத்தன போக்கில் உள்ளது.
இதனால் இந்த பள்ளியை வேறு மாநிலத்துக்கு மாற்றுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதுமட்டுமின்றி நிரவியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் பழைய கட்டடத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. ஒரு வளாகத்தில் அரசு பள்ளி இயங்கும் போது, அதே இடத்தில் மற்றொரு பள்ளி இயங்குவது கல்வி விதிமுறைகளுக்கு புறம்பானதாக இருக்கும் என்பதை புதுவை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
அது மட்டுமின்றி காரைக்கால் அனைத்து வகையிலும் புறக்கணிக்கபடுவதற்கு இதுவும் ஒரு சான்றாகும். காரைக்கால் மாணவா்களின் நலனை கருதி புதுவை அரசு உடனடியாக நிலம் ஒதுக்கி கொடுத்து கேந்திரிய வித்யாலயா பள்ளியை தொடா்ந்து காரைக்கால் நிரவி பகுதியில் இயங்கிட புதுவை அரசும், ஆளுநரும், கல்வித்துறையும் போா்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் நாராயணசாமி.