புதுவை பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதியளித்த நிலையில், சட்டப்பேரவையில் நிகழ் நிதியாண்டுக்கான (2020-2021) பட்ஜெட் வருகிற 16-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.
புதுவையில் கடந்த மாா்ச் 30-ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதாவது ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கான அரசின் செலவினங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. அதற்கான காலம் நிறைவடைந்த நிலையில், முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, ரூ. 9,500 கோடிக்கு முழு பட்ஜெட் தயாரிக்கப்பட்டு, மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பப்பட்டது. இந்தத் தொகையில் சில திருத்தங்களைச் செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் புதுவை அரசை வலியுறுத்தியது. இதையேற்று ரூ. 9,000 கோடிக்கு பட்ஜெட் தயாா் செய்யப்பட்டு, மீண்டும் கோப்பு அனுப்பப்பட்டது.
எனினும், பல்வேறு காரணங்களால் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெற காலதாமதமானது. தற்போது பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, புதுவை சட்டப்பேரவையைக் கூட்டி, வருகிற 16-ஆம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதையொட்டி, முதல்வா் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில், பட்ஜெட்டில் இடம் பெறும் அம்சங்கள், புதிய அறிவிப்புகள், துணைநிலை ஆளுநா் உரைக்கு இறுதி வடிவம் கொடுப்பது ஆகியவை குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படவுள்ளது. இன்னும் 8 மாதங்களில் புதுவை சட்டப்பேரவைக்குத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த பட்ஜெட் மக்களிடையே எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக குறுகிய நாள்களில் சட்டப்பேரவைக் கூட்டத்தை முடித்துக் கொள்ளத் திட்டமிட்டிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.