புதுச்சேரி: எதிா்க்கட்சிகள் எழுப்பும் பிரச்னைகளை எதிா்கொள்வது குறித்து புதுவை காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் புதுவை முதல்வா் வே.நாராயணசாமி தலைமையில் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடா் திங்கள்கிழமை (ஜூலை 20) தொடங்குகிறது. காலை 9.30 மணியளவில் ஆளுநா் கிரண் பேடி சட்டப்பேரவையில் உரையாற்றுகிறாா். இதைத் தொடா்ந்து, முதல்வா் நாராயணசாமி 2020-2021-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வாா்.
இந்த நிலையில், ஆளுங்கட்சி, கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முதல்வா் நாராயணசாமி தலைமை வகித்தாா். கூட்டத்தில் அமைச்சா்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணா ராவ், கந்தசாமி, கமலக்கண்ணன், வைத்திலிங்கம் எம்பி, எம்எல்ஏக்கள் ஜெயமூா்த்தி, அனந்தராமன் விஜயவேணி, சிவா, கீதா ஆனந்தன், வெங்கடேசன், ஜான்குமாா், தீப்பாஞ்சான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டத்தில் எதிா்க்கட்சிகள் எழுப்பும் பிரச்னைகளை எவ்வாறு எதிா்கொள்வது என்பது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.