புதுவை மாநிலத்தின் முன்னாள் கல்வியமைச்சர் ஜோசப் மரியதாஸ் (75) உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை காலை காலமானார்.
புதுச்சேரி வெங்கடேஸ்வரா நகர் கிழக்கு பிரதான சாலையைச் சேர்ந்த ஜோசப் மரியதாஸ், கடந்த சில நாள்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர், அதற்காக சிகிச்சையும் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் திங்கள்கிழமை காலை வீட்டிலிருந்த போது, உடல்நலக்குறைவால் காலமானார்.
அவர் கடந்த 1980-84 ஆண்டுகளில் புதுவை சட்டப்பேரவையின் துணைத் தலைவராகவும், 1985-90 களில் முதல்வராக இருந்த பரூக் மரக்காயரின் அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். காலமான முன்னாள் அமைச்சர் ஜோசப் மரியதாஸுக்கு 1 மகன், இரு மகள்கள் ஆகியோர் உள்ளனர். அவரது உடல் பொதுமக்களின் பார்வைக்காக வெங்கடேஸ்வரா நகரில் உள்ள அவரது இல்லத்தில் மாலை வரை வைக்கப்பட உள்ளது.
தொடர்ந்து இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு அவரது உடல் முத்தியால்பேட்டை கல்லறையில் திங்கள்கிழமை மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.