புதுச்சேரியில் மேலும் ஒரு முதியவர் கரோனாவால் உயிரிழந்தார். இதனால் புதுச்சேரியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 163 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் எஸ். மோகன்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போது புதுச்சேரியில் 6 பேரும், காரைக்காலில் 11 வயது சிறுமியும் என மாநிலத்தில் 7 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே முதலியார்பேட்டைச் சேர்ந்த 82 வயது முதியவர் பக்கவாதம், ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இறந்தார். இறப்புக்குப் பிறகு அவரை சோதனையிட்டபோது, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசின் விதிமுறைகளின்படி, இறந்த முதியவரை அடக்கம் செய்யும் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இதனால் தற்போது மாநிலத்தில் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 163 ஆக உயர்ந்துள்ளது. 10 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 84 ஆகவும் உள்ளது என்றார்.