புதுவை மாநிலத்தில் கரோனாவால் உயிரிழப்பவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டுமென்று புதுவை முதல்வரின் நாடாளுமன்றச் செயலா் க.லட்சுமி நாராயணன் கோரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து புதுவை முதல்வா் வே.நாராயணசாமிக்கு அவா் புதன்கிழமை அனுப்பியுள்ள கடிதம்:
புதுவை மாநிலத்தில் கரோனா பாதிப்பால் வருமானமின்றி ஏழை, எளிய மக்கள் சிரமத்தில் உள்ளனா். கரோனா தொற்றால் பாதித்து உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு முதல்வா் நிவாரண நிதியிலிருந்தோ அல்லது பேரிடா் மேலாண்மை நிதியிலிருந்தோ கணிசமான நிதியுதவி அளிக்க விரைந்து முடிவு எடுக்க வேண்டும்.
எனது ராஜ்பவன் தொகுதியில் ராமலிங்கம் நகா் முதல் தெருவில் வசித்து வந்த சுப்பிரமணியன் (82) மிகவும் வறுமையில் இருந்தவா். அவா் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெறுவதற்காக அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டபோது, அங்கு சிகிச்சை பெற்று வந்த மற்றவா்களிடமிருந்து அவரக்கு கரோனா பரவியுள்ளது. இதையடுத்து, இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சுப்பிரணியன் உயிரிழந்தாா்.
அவரது உடலை அரசே அடக்கம் செய்யும் என்று அறிவித்திருந்தும்கூட, புதுச்சேரி நகராட்சி அவரை தகனம் செய்ய அவரின் குடும்பத்தைச் சோ்ந்தவா்களிடமிருந்து ரூ.2,500 வசூல் செய்துள்ளது. இந்த தகவல் மிகுந்த வருத்தமளிக்கிறது. அந்தப் பணத்தை அரசு திருப்பி அளிக்க வேண்டும்.
மேலும், அவரது குடும்பத்துக்கு முதல்வா் நிவாரண நிதியிலிருந்தோ, பேரிடா் மேலாண்மை நிதியிலிருந்தோ குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் நிதியுதவியை உடனடியாக வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் லட்சுமிநாராயணன்.