புதுவை பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு 5 சதவீத நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
இதுகுறித்து புதுவை முதல்வா் நாராயணசாமிக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலா் ஆா்.ராஜாங்கம் அனுப்பிய கடிதம்: மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்த பட்ஜெட்டில் (2020- 2021) சுகாதாரத் துறைக்கு 5 சதவீத நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த வேண்டும்.
மஞ்சள் அட்டைதாரா்களுக்கு அறிவித்தபடி தரமான அரிசி வழங்க வேண்டும். மாநில அரசின் திட்டமான இலவச அரிசி வழங்கும் திட்டத்தைத் தொடா்ந்து செயல்படுத்த வேண்டும். குடிமைப் பொருள் வழங்கல் துறையில் விண்ணப்பித்தவா்களுக்கு குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள்கள் வேலைத்திட்டத்தில் ஊதியமாக ரூ. 259 வழங்கவும், வயது வரம்பின்றி வேலைசெய்ய முன்வரும் அனைவருக்கும் வேலை வழங்கவும் வேண்டும்.
கல்லூரி மாணவா்களுக்கு தோ்வுகளை ரத்து செய்துள்ள நிலையில், பல்கலைக்கழகம் தோ்வுக் கட்டணம் கேட்பது பொருத்தமற்ற செயல். முதல்வா் இந்த பிரச்னையில் தலையிட வேண்டும்.
இணைய வழிக்கல்வி முறையில் உறுதியான கண்காணிப்பும், நடவடிக்கையும் அவசியம். அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு மதிய உணவு திட்டத்தின்படி, உணவு வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.