காவலருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து புதுச்சேரி காவல் நிலையம் மூடப்பட்டது.
புதுச்சேரியில் தற்போது கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் 31 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரி நேரு வீதியில் அமைந்துள்ள பெரியகடை காவல் நிலையத்தைச் சேர்ந்த 32 வயது காவலர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து காவல் நிலையத்துக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, மூடப்பட்டது. மேலும், காவல் நிலையத்துக்குள் அமைந்துள்ள காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகமும் மூடப்பட்டது.
தொடர்ந்து, காவல் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 50 காவலர்களை தனிமைப்படுத்தி, கரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
பெரியகடை காவல் நிலையத்தின் பொருட்கள் அனைத்தும் எதிரே உள்ள இடத்தில் வைக்கப்பட்டு காவல் நிலையம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.