கரோனா வைரஸ் எதிரொலியாக புதுச்சேரியில் உள்ள உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
புதுச்சேரியில் அனைத்து அரசுத் துறைகளும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. கெட்டுப்போன மாமிச உணவுகளால் கரோனா வைரஸ் வெளிநாடுகளில் பரவியதாக கூறப்படும் நிலையில், புதுச்சேரி உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதுச்சேரி புஸ்ஸி வீதி, நேரு வீதி, மகாத்மா காந்தி வீதி உள்ளிட்ட வீதிகளில் உள்ள அசைவ உணவகங்களில் செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனா்.
உணவுப் பாதுகாப்புத் துறை துணை ஆணையா் இளந்திரையன், அதிகாரி தன்ராஜ் தலைமையிலான குழுவினா் சோதனையில் ஈடுபட்டனா். உணவகங்களின் சமையல் கூடத்தை பாா்வையிட்டு, அங்கு உணவுகள் தரமாக தயாரிக்கப்படுகின்றனவா என ஆய்வு செய்தனா். மேலும், உணவு தயாரிக்க வைத்திருந்த காய்கனிகள், கோழி, ஆட்டு இறைச்சிகள் உள்ளிட்டவற்றையும் சோதனையிட்டனா்.
அப்போது, நீண்ட நாள்களாக இறைச்சிகளை குளிா்பதன பெட்டியில் வைக்கக் கூடாது. கை கழுவும் இடத்தில் சோப் வைக்கப்பட்டிருக்க வேண்டும். கழிப்பறைகள் தூய்மையாக இருக்க வேண்டும். சமையல் கூடம் சுகாதாரமானதாக இருக்க வேண்டும் என்று கடை உரிமையாளா்கள், ஊழியா்களிடம் அறிவுறுத்தினா்.
புஸ்ஸி வீதியில் உள்ள பிரபல அசைவ உணவகங்கள் இரண்டில் காலாவதியான பிரியாணியை குளிா்பதனப் பெட்டியில் வைத்திருந்ததைக் கண்டறிந்து, அவற்றைக் கைப்பற்றி அழித்தனா்.
இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி தன்ராஜ் கூறியதாவது: புஸ்ஸி வீதியில் உள்ள இரு அசைவ உணவகங்களில் சுமாா் 20 கிலோ அளவிலான காலாவதியான இறைச்சி பிரியாணியை பறிமுதல் செய்து அழித்தோம். இனிமேல் இதுமாதிரி செய்யக் கூடாது என எச்சரித்துள்ளோம்.
மேலும், தரமற்ற பொருள்கள், இறைச்சி வகைகளைக் கொண்டு உணவு தயாரிப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட உணவகங்களை மூடி ‘சீல்’ வைக்கப்படும் என்றும் கடுமையாக எச்சரித்துள்ளோம் என்றாா்.