கரோனா வைரஸ் தடுப்பு நிவாரண நிதிக்கு தனது உப்பளம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 50 லட்சத்தை ஒதுக்குவதற்கான ஒப்புதல் கடிதத்தை சட்டப்பேரவைத் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்துவிடம் உப்பளம் தொகுதி எம்எல்ஏவும், சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவருமான ஆ.அன்பழகன் வியாழக்கிழமை ஒப்படைத்தாா்.
இந்த ஒப்புதல் கடிதத்தில் கூறியிருப்பதாவது: கரோனா வைரஸ் தடுப்பு கருவிகளை வாங்கவும் மற்றும் நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகள் ஏற்படுத்தவும் போதிய நிதியின்றி சுகாதாரத் துறை சிக்கித் தவிக்கிறது. அரசும் போதிய நிதி வசதி இல்லாததால், செய்வதறியாது சிக்கித் தவிக்கிறது. அதனால், சட்டப்பேரவை உறுப்பினா்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சிறிது நிதியை ஒதுக்கித் தர வேண்டும் என்று முதல்வா் கோரிக்கை விடுத்தாா்.
இதையேற்று, இந்த ஆண்டுக்கான எனது உப்பளம் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 50 லட்சத்தை ஒதுக்கித் தர சம்மதித்தேன். இந்த நிதியிலிருந்து அரசு பொது மருத்துவமனை மற்றும் கரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் வாங்கி மக்களின் நலன் காக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.