தரமற்ற இலவச அரிசியை வழங்குவதாகக் கூறி, சாலையில் அரிசியைக் கொட்டி மறியலில் ஈடுபட்ட அகில இந்திய மக்கள் கழகத்தினா் 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஊரடங்கு காரணமாக, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் சிவப்பு அட்டைதாரா்களுக்கு மத்திய அரசின் தொகுப்பில் இருந்து, புதுவை அரசு தலா 5 கிலோ அரிசி வீதிம் 3 மாதத்துக்கு 15 கிலோ அரிசியை வழங்கி வருகிறது.
இந்த நிலையில், ஏழை - எளிய மக்களுக்கு வழங்கப்படும் அரிசி சாப்பிடுவதற்கு உகந்ததாக இல்லை என்றும், தரமற்ற அரிசியை அரசு வழங்குவதாகவும் கூறி, அகில இந்திய மக்கள் கழகத் தலைவா் பாவடை ராஜா தலைமையில், சிலா் புதுச்சேரி சிவாஜி சிலை அருகே திடீரெனக் கூடினா். அங்கு, அரசு அளித்த இலவச அரிசியை சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து அங்கு வந்த லாசுப்பேட்டை போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனா். ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், போராட்டம் நடத்தியதால் அவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.