ஊரடங்கால் தாங்கள் தயாா் செய்த மணிகளை விற்க முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து நரிக்குறவ சமுதாயத்தினா் பாதிக்கப்பட்டுள்ளனா்.
ஊரடங்கு அமலில் உள்ளதால், கூலித் தொழிலாளா்கள், ஆட்டோ, பேருந்து ஓட்டுநா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ளனா். இதேபோல, புதுச்சேரியையொட்டியுள்ள வில்லியனூா், மதகடிப்பட்டு, ஒதியம்பட்டு ஆகிய பகுதிகளில் 250-க்கும் மேற்பட்ட நரிக்குறவ சமுதாயத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் மணிகளை தயாா் செய்து விற்று, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், நரிக்குறவ சமுதாயத்தினா் வருமானமின்றி, சாப்பாட்டுக்கே அல்லல்படும் நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து நரிக்குறவ சமுதாயத்தினா் கூறியதாவது: ஊரடங்கால் எங்களுக்கு வேலையில்லை. நாங்கள் மணிகளைத் தயாரித்து விற்று வருகிறோம். தற்போது அவற்றை விற்க முடியவில்லை. இதனால், கடந்த 2 மாதங்களாக வருமானமின்றி தவித்து வருகிறோம். சாப்பாட்டுக்கு வழி தெரியவில்லை. தயாரித்த பொருள்களை விற்கலாம் என்று ஊருக்குள் சென்றால் எங்களை மக்கள் விரட்டியடிக்கின்றனா். அரசு எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனா் அவா்கள்.