உலக செவிலியர் தினத்தையொட்டி புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் செவிலியர்களை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கையடுத்து கும்பித்து அவர்களின் சேவை சிறக்க வாழ்த்து தெரிவித்தார்.
பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே12 உலக செவிலியர் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று உலக செவிலியர் தினத்தையொட்டி புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை, ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, மருத்துவமனையில் பணிபுரியும் தலைமை செவிலியர்கள், செவிலியர்கள், பயிற்சி மாணவிகள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்தனர். இதனிடையே புதுச்சேரி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து கவிரவித்த ஆளுநர் கிரண்பேடி, செவிலியர்களை கையடுத்து கும்பிட்டு தலை வணங்கி நன்றி தெரிவித்தார்.
இது குறித்து வீடியோவை அவர் தனது வாட்ஸ்அப்பில் பதிவிட்டுள்ளார். அதில் ஆளுநர் கிரண்பேடி செவிலியர்களிடம் பேசும்போது, ‘‘இது செவிலியர்களின் நாள். இந்நாளில் எங்களுக்காக சேவை புரியும் உங்களுக்கு அனைவரின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் ஒருவரை மட்டுமே காக்க முடியும். இது அன்பின் காரணமாக இருக்கலாம்.
ஆனால் செவிலியராகிய நீங்கள் சேவை மனப்பான்மையுடன் ஆயிரக்கணக்கானோரை காத்து வருகின்றீர்கள்’’ என்று கூறி வாழ்த்து தெரிவித்தார். மேலும் ‘‘வெள்ளை உடையணிந்த மற்றும் பச்சை, நீளம், காக்கி உடையணிந்த போர்வீரர்களுக்கும் இந்நாளில் எனது வணக்கம்’’ என குறிப்பிட்டுள்ளார்.