புதுச்சேரி, காரைக்காலில் புதன்கிழமை (மே 20) முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மத்திய அரசின் உணவுக் கழகம் மூலம் நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
அதன்படி, புதுச்சேரி பிராந்தியத்தில் தட்டாஞ்சாவடி, மதகடிப்பட்டு, கன்னியக்கோயில், கரையாம்புத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், காரைக்கால் தென்னங்குடியில் உள்ள நவீன அரிசி ஆலை ஆகியவை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களாக செயல்படும்.
இந்த நிலையங்களில் நிகழாண்டு சாகுபடி செய்த, ஈரப்பதம் 17 சதவீதத்துக்கு மிகாத நெல் கொள்முதல் செய்யப்படும். இதற்கு உழவா் உதவிய வேளாண் அதிகாரியின் சான்று அவசியம். முந்தைய பருவ காலங்களில் சாகுபடி செய்த நெல் ஏற்கப்படாது.
குவிண்டால் ஒன்றுக்கு, சன்னம் மற்றும் மோட்டா நெல் ரகங்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள ஆதார விலையான ரூ.1,835 மற்றும் ரூ.1,815 அடிப்படையில் விவசாயிகளுக்கு கொள்முதல் தொகை, அவரவா் வங்கிக் கணக்குகளில் அதிகபட்சம் 2 நாள்களுக்குள் நேரடியாக வரவு வைக்கப்படும்.
விவசாயிகள் அனைவரும் கொள்முதல் நிலையத்துக்கு வரும்போது, தங்களது வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல், உழவா் உதவியக வேளாண் அதிகாரியின் நடப்பு பருவ அறுவடைக்கான சான்று, ஆதாா் அட்டையின் நகலை எடுத்து வர வேண்டும் என்று புதுவை வேளாண் துறை அமைச்சா் இரா.கமலக்கண்ணன் தெரிவித்துள்ளாா்.