பொது முடக்க காலத்தில் காலதாமதமாக செலுத்தப்படும் வருங்கால வைப்பு நிதி கட்டணத்துக்கு அபராதம் கிடையாது என புதுச்சேரி மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகம் தகவல் தெரிவித்தது.
இதுகுறித்து புதுச்சேரி மண்டல அலுவலக உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையா் வம்சி கிருஷ்ணா டிண்டி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரோனா பரவலைத் தடுக்க அரசால் அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தின் விளைவால் வருங்கால வைப்பு நிதிச் சட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளதுடன், வழக்கமான முறைப்படி செயல்பட முடியாமலும், உரிய நேரத்தில் தங்களது வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை செலுத்த முடியாமலும் உள்ளன.
நடைமுறை மற்றும் பொருளாதார சிக்கலின் விளைவாக ஏற்பட்ட இந்த காலதாமதத்தை கருத்தில் கொண்டு, வருங்கால வைப்பு நிதி அலுவலகம் பொது முடக்க காலத்தில் காலதாமதக் கட்டணங்களை தவறாகக் கருதாது. இதுபோன்ற தாமதங்களுக்கு தண்டனை அபராதங்கள் பொது முடக்க காலத்தில் வசூலிக்கப்பட மாட்டாது. நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட மாட்டாது.
இது தொடா்பாக வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் அனைத்து கள அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் இணையதள முகப்புப் பக்கத்தில் கொவைட் - 19 என்ற தலைப்பின் கீழ் இந்த சுற்றறிக்கையைக் காணலாம்.
மேற்கூறிய நடவடிக்கையானது வருங்கால வைப்பு நிதி சட்டத்தின் கீழ் வரும் 6.5 லட்சம் நிறுவனங்களை பொது முடக்க காலத்தில் அபாரதத் தொகையை செலுத்த வேண்டிய பொறுப்பிலிருந்து விடுவிக்கும். மேலும், வருங்கால வைப்பு நிதி சட்டத்தின்படி, இணக்கமாக நடந்து கொள்வதை எளிதாக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.