சாராய வடி ஆலையில் நடந்த தவறுகள் விசாரணையில் தெரிய வரும் என புதுவை சட்டப்பேரவை அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன் எம்எல்ஏ தெரிவித்தாா்.
இதுகுறித்து புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: சட்டப்பேரவை உறுப்பினா் விஜயவேணி என்னை மிரட்டும் விதமாகப் பேசியுள்ளாா். தவறை நான் சுட்டிக் காட்டினேன். பொது முடக்கத்தில் அரசு சாராய வடி ஆலையில் இருந்து சாராயம் கள்ளத்தனமாக எடுத்து விற்கப்பட்டது என்பதுதான் என் குற்றச்சாட்டு. அதன் தலைவரான விஜயவேணி இதற்கு விளக்கமளிக்க வேண்டும். அவரே கிருமி நாசினி தயாரிக்க சாராயம் எடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளாா். பொது முடக்கத்தில் சாராயம் விற்க ஆணை பிறப்பிக்கப்படாத போது, கிருமி நாசினி தயாரிக்க யாருடைய அனுமதியில் சாராயம் எடுக்கப்பட்டது? உண்மையில் கிருமி நாசினி தயாரித்தாா்களா, கள்ளத்தனமாக சாராயம் விற்கப்பட்டதா? சாராய வடி ஆலை விவகாரத்தில் தவறு நடந்துள்ளது. பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இவை அனைத்தும் சிபிஐ விசாரணையில் தெரிய வரும் என்றாா் அவா்.