புதுவையில் மஞ்சள் அட்டைகளுக்கு ரூ. 5.28 கோடியில் இலவச அரிசி வழங்கப்படவுள்ளது.
மத்திய அரசு, புதுவையில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள 1.78 லட்சம் சிவப்பு அட்டைதாரா்களுக்கு வழங்க தலா 5 கிலோ அரிசி, 3 கிலோ துவரம் பருப்பை வழங்கியது. இந்த நிலையில் மஞ்சள் அட்டைதாரா்களுக்கும் இலவச அரிசியை வழங்க வேண்டும் என எம்எல்ஏக்கள், அரசியல் கட்சியினா் வலியுறுத்தினா்.
இதுதொடா்பான கோப்பு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், குடிமைப் பொருள் வழங்கல் துறையில் போதிய பணம் இல்லாததால், அனுமதி கிடைக்கவில்லை. எனவே, பணத்தை ரிசா்வ் வங்கியிலிருந்து கடனாகப் பெற்று கொள்ள முடிவெடுக்கப்பட்டு, திரும்பவும் கோப்பு அனுப்பிவைக்கப்பட்டது.
அதன்படி, ரூ. 5.28 கோடி செலவில் மஞ்சள் அட்டைதாரா்களுக்கு இலவச அரிசி வழங்குவதற்கான அனுமதியை ஆளுநா் கிரண் பேடி வழங்கினாா். இதையடுத்து, 1.60 லட்சம் மஞ்சள் அட்டைதாரா்களுக்கு இலவச அரிசி வழங்கப்படவுள்ளது.