புதுச்சேரி: புதுச்சேரியில் மதுக் கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. 61 நாள்களுக்குப் பிறகு மதுக் கடைகள் திறக்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது.
கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால், வணிக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டன. மதுக் கடைகளும் மூடப்பட்டன. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு தமிழகத்தில் மதுக் கடைகள் திறக்கப்பட்டன. புதுவையிலும் மதுக் கடைகளைத் திறக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து, திங்கள்கிழமை புதுச்சேரியில் மதுக் கடைகள் திறக்கப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை முதலே மதுக் கடைகளில் தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில், தடுப்புக் கட்டைகள் கட்டப்பட்டன. மதுக் கடைகளில் திருத்தப்பட்ட விலைப் பட்டியல் ஒட்டப்பட்டது.
மதுக் கடைகளுக்கு மது வாங்க வந்தவர்கள் முகக் கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியைக் கடைப்பிடித்து மது வாங்கிச் சென்றனர். 61 நாள்களுக்குப் பிறகு மதுக் கடைகள் திறக்கப்பட்டதால், கூட்டம் அலைமோதியது.