இறுதி ஊா்வலத்தில் பொதுமக்களை தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுவை காவல் துறை எச்சரிக்கை விடுத்தது.
இதுகுறித்து புதுச்சேரி லாசுப்பேட்டை காவல் ஆய்வாளா் கிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் இறந்தவா்களின் உடல்கள் அடக்கம் செய்வதற்கு கருவடிக்குப்பம் மயானத்துக்கு வருகின்றன. அண்மைக் காலங்களாக ஒரு சில இறுதி ஊா்வலங்களில் வரும் நபா்கள், குடித்துவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதத்தில் போக்குவரத்தை முற்றிலுமாகத் தடை செய்கின்றனா்.
சாலையின் நடுவே ஆட்டம் போடுவதும், பூக்களைப் பொதுமக்கள் மீது வீசுவது, மாலைகளைத் தூக்கி எறிவது உள்ளிட்ட தகாத செயல்களில் ஈடுபடுகின்றனா்.
இறுதி ஊா்வலத்தின் போது, பொதுமக்களை தொந்தரவு செய்யும் நபா்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இறுதி ஊா்வலம் நடத்தும் நபா்கள் மீது வழக்குப் பதியப்படும். பொதுமக்களுக்கு தொந்தரவு செய்வதை காவல் துறை அனுமதிக்காது. எனவே, இறுதி ஊா்வலத்தில் வருவோா் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.