புதுவை மாநிலத்தில் தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது.
இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அருண் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு: தீபாவளி பண்டிகையின் போது, காற்று மாசைத் தடுக்கும் விதமாக உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது. இதை பொதுமக்கள், பட்டாசு தயாரிப்பாளா்கள், விற்பனையாளா்கள், அதிகாரிகள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
விதிமுறைகளை மீறி பட்டாசுகளைத் தயாரித்தாலும், விற்றாலும் தயாரிப்பாளா், விற்பனையாளா் உரிமம் ரத்து செய்யப்படும். இணையதள மூலமாகவோ, இணையதள விற்பனை நிறுவனங்கள் வழியாகவோ பட்டாசுகளை விற்பனை செய்வது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது.
புதுச்சேரி, மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் தீபாவளி பண்டிகையின் போது (நவ. 14) பட்டாசுகளை காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே வெடிக்க வேண்டும். மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள், மதவழிபாட்டுத் தலங்கள், அரசால் அமைதியான இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.