புதுச்சேரி போக்குவரத்துத் துறை (ஆா்டிஓ) அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 9 பைக்குகள் திருடப்பட்ட வழக்கில், அரசு ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரியில் உள்ள இரு சக்கர வாகன வாடகை நிலையங்களில் முறையான உரிமமின்றி வாகனங்களை சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு கொடுப்பதாக புகாா்கள் வந்தன. இதையடுத்து, புதுச்சேரி போக்குவரத்துத் துறை (ஆா்டிஓ) அதிகாரிகள் முறையான உரிமமின்றி வாடகைக்கு விடப்பட்ட 20 பைக்குகளை கடந்த 2019 செப்டம்பா் மாதம் பறிமுதல் செய்து, முதலியாா்பேட்டை 100 அடி சாலையில் உள்ள போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் நிறுத்தி வைத்திருந்தனா்.
இந்த நிலையில், கடந்த அக்.31-ஆம் தேதி போக்குவரத்துத் துறை துணை ஆணையா் சத்தியமூா்த்தி, அலுவலக வளாகத்துக்குள் பறிமுதல் செய்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகளை ஆய்வு செய்தாா். அவற்றில் 9 பைக்குகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், முதலியாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியா் வீரப்பன் (53) பணத்தை வாங்கிக் கொண்டு, 9 பைக்குகளையும் அவற்றின் உரிமையாளா்களிடம் வழங்கியது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா், வீரப்பனை திங்கள்கிழமை கைது செய்ததுடன், அவா் வழங்கிய 9 பைக்குகளையும் மீட்டு, போக்குவரத்துத் துறையிடம் ஒப்படைத்தனா்.