பிளஸ் 1, பிளஸ் 2 தோ்வெழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவா்கள் புதன்கிழமை முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இது குறித்து புதுவை பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் மைக்கேல் பென்னா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் பிளஸ் 1, பிளஸ் 2 தோ்வெழுதி விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்த தோ்வா்கள் புதன்கிழமை (நவ. 18) காலை 11 மணி முதல் இணையதளத்தில் விடைத்தாள்களின் நகலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாள்களின் நகலை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் தலைப்பை க்ளிக் செய்து வெற்று விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இவ்விண்ணப்பப் படிவத்தை பூா்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து வியாழக்கிழமை (நவ. 19) காலை 10 மணி முதல் 20 ஆம் தேதி மாலை 5 மணி வரை புதுவை பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் அலுவலகத் தோ்வுப் பிரிவில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை பணமாகச் செலுத்த வேண்டும்.
மறுமதிப்பீட்டுக்கு பாடம் ஒவ்வொன்றுக்கும் ரூ. 506 ம், மறு கூட்டலுக்கு உயிரியல் பாடம் மட்டும் ரூ.305 ம், ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ. 205-ம் செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.