புதுவையில் இருந்து வெளி மாநிலங்களுக்குச் செல்லும் வாகனங்களுக்கு இணையதளம் வழியாக அனுமதி (பொ்மிட்) வழங்கப்படும் என்று புதுவை அரசு அறிவித்தது.
இது குறித்து புதுவை அரசின் போக்குவரத்து ஆணையா் சிவக்குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
போக்குவரத்துத் துறை சம்பந்தமான அனைத்து சேவைகளும் கணினிமயமாக்கப்பட்டு இணையதளம் வழியாக அளிக்கப்பட்டு வருகிறது. தேசிய தகவல் மையம் உருவாக்கிய ‘வாகன் 4.0’ மற்றும் ‘சாரதி 4.0’ ஆகிய மென்பொருள்கள் மூலம் இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது.
புதுவை அரசு அனுமதி பெற்ற பயணிகள் ஒப்பந்த வாகனங்கள், வெளி மாநிலங்களுக்கு செல்வதற்காக சிறப்பு ‘பொ்மிட்’ வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும், போக்குவரத்து சோதனைச் சாவடிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த சேவை இணையதளம் மூலமாக வழங்கப்பட உள்ளது.
வாகனம் ஓட்டுபவா்கள் தங்கள் செல்லிடப்பேசியில் இருந்தோ அல்லது வீட்டிலிருந்து கணினி மூலமாகவோ தாங்களாகவே தங்களது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை செலுத்தி, தனி அனுமதி பெற முடியும். இதனால், வாகன ஓட்டிகள் சோதனைச் சாவடிக்கோ, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துகோ செல்ல வேண்டிய அவசியம் கிடையாது.
தனி அனுமதிபோல வெளியூரில் இருந்து புதுவைக்கு வரும் வாகனங்களுக்கும் இணையதளம் மூலமாக தற்காலிக அனுமதி விரைவில் வழங்கப்பட உள்ளது. இணையதளம் வாயிலாக இந்த தனி அனுமதியைப் பெற முடியும் என அதில் தெரிவித்துள்ளாா் சிவக்குமாா்.