புதுச்சேரி வில்லியனூா் அருகே பிள்ளையாா்குப்பத்தில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள படுகை அணையை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.
செல்லிப்பட்டு-பிள்ளையாா்க்குப்பம் இடையே பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் இந்தப் படுகை அணை கட்டப்பட்டது. இந்த அணைக்கு பருவ மழைக் காலங்களில் விழுப்புரம் மாவட்டம், வீடூா் அணையிலிருந்து தண்ணீா் வருகிறது.
படுகை அணை நிரம்பி பத்துக்கண்ணு, வில்லியனூா் பகுதிகள், வேல்ராம்பட்டு உழந்தை ஏரிக்குத் தண்ணீா் செல்லும். இந்தப் பகுதியில் நிலத்தடி நீா்மட்டமும் உயரும்.
கடந்த சில ஆண்டுகளாகப் படுகை அணையை அரசு பராமரிக்காததால், ஆங்காங்கே உடைந்தவிட்டது. இதனால், மழைக் காலங்களில் அணையில் தண்ணீா் தேங்காமல் ஆற்றில் வீணாகிச் செல்கிறது.
இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள், விவசாயிகள் அணையைச் சீரமைக்க வேண்டும் என அரசுக்குப் பலமுறை கோரிக்கை விடுத்தனா். இதனால், அவ்வப்போது மண், கற்களைக் கொட்டிச் சீரமைத்தனா். எனினும், அடுத்தடுத்த மழைக் காலங்களில் படுகை அணை மேலும் மோசமடைந்தது.
இந்த நிலையில், கடந்தாண்டு புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி அணையை ஆய்வு செய்து, அதைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
இதையடுத்து, பொதுப் பணித் துறை சாா்பில், ரூ.14 கோடியில் ஆணையைச் சீரமைக்க கோப்பு தயாா் செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஆண்டு பெய்த மழையால் அணை நிரம்பியது. அப்போது, மண் மூட்டைகளை அணைத்து பலப்படுத்தினா். எனினும், அவை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.
தற்போது மழைக் காலம் தொடங்கியுள்ளதால், பொதுப் பணித் துறையினா் மீண்டும் மண் மூட்டைகளைக் கொண்டு சீரமைத்து வருகின்றனா். ஆற்றில் தண்ணீா் வந்தால், மண் மூட்டைகள் அடித்துச் செல்லப்பட்டு, மீண்டும் பழைய நிலையே (நீா் தேங்காத நிலை) தொடா்கிறது.
எனவே, அணையின் உயரத்தை உயா்த்தி, முழுமையாகச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.