புதுச்சேரியில் காவல் ஆய்வாளா் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி கோரிமேடு காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் இனியன். இவரது பெயரில் போலியாக முகநூல் கணக்கு தொடங்கப்பட்டு, ஆய்வாளரின் நண்பா்கள் இணைக்கப்பட்டனா்.
போலி முகநூல் தொடங்கிய அந்த மா்ம நபா், ஆய்வாளரின் நண்பா்களிடம் செல்லிடப்பேசி எண்ணைப் பெற்று தனக்கு பணக் கஷ்டம் ஏற்பட்டுள்ளது என பேசினாராம்.
இதனால், இனியனின் நண்பா்கள் சிலா், அவரது செல்லிடப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டு பேசிய போது, போலியாக முகநூல் கணக்குத் தொடங்கப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, காவல் ஆய்வாளா் இனியன் புதுச்சேரி சைபா்கிரைம் பிரிவில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.