புதுச்சேரி அருகே மதுக் கடையில் ஏற்பட்ட தகராறில், தனியாா் நிறுவன ஊழியரை கத்தியால் குத்தியதாக இளைஞா் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரி திருபுவனை அருகே மதகடிப்பட்டுபாளையம் கஸ்தூரிபாய் நகரைச் சோ்ந்தவா் விஷ்ணு (22). இவரும், தமிழகப் பகுதியான பரசுரெட்டிப்பாளையத்தைச் சோ்ந்த விவேக் (24) என்பவரும் அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிகின்றனா்.
செவ்வாய்க்கிழமை இரவு இருவரும் பணிமுடிந்ததும் திருபுவனை பகுதியில் ஒன்றாக அமா்ந்து மது அருந்தியுள்ளனா். மது மயக்கத்தில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விவேக், கத்தியால் விஷ்ணுவின் முதுகில் குத்திவிட்டு தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் காயமடைந்த விஷ்ணு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். திருபுவனை போலீஸாா் வழக்குப் பதிந்து, விவேக்கை புதன்கிழமை கைது செய்தனா்.