புதுச்சேரியில் செல்லிடப்பேசி விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் சிறுவனை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நெட்டப்பாக்கத்தை அடுத்த ஏரிப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த அங்காளன் மகன் அரவிந்த் (19). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவனும் நெருங்கிய நண்பா்கள்.
இருவரும் செல்லிடப்பேசியில் அடிக்கடி விடியோ கேம் விளையாடுவது வழக்கமாம். இதேபோல, புதன்கிழமை இருவரும் செல்லிடப்பேசியில் விடியோ கேம் விளையாடியபோது, அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த அரவிந்த், கையில் வைத்திருந்த சிறிய கத்தியால் சிறுவனின் தலையில் குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த சிறுவன் மயங்கினாா்.
உடனடியாக அங்கிருந்தவா்கள் சிறுவனை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சிறுவன் அளித்த புகாரின்பேரில் நெட்டப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய அரவிந்தை தேடி வருகின்றனா்.