அரசுத் துறைகளின் நிலுவைத் தொகைரூ.10.41 கோடியை வழங்க வலியுறுத்தல்
புதுச்சேரி அமுத சுரபி நிறுவன ஊழியா்களுக்கான ஊதியத்தை வழங்க, அந்த நிறுவனத்துக்கு அரசுத் துறைகள் வழங்க வேண்டிய ரூ. 10.41 கோடியை வழங்க வேண்டுமென தொமுச வலியுறுத்தியது.
புதுச்சேரி கூட்டுறவுத் துறையின் அமுத சுரபி நிறுவனத்தில் 240 ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.
அந்த நிறுவனத்தின் தொமுச தொழிற்சங்கம் புதிதாகத் தொடங்கப்பட்டது. தொமுச பொதுச் செயலா் அன்பழகன் சங்கத்தைத் தொடக்கி வைத்தாா். அமுத சுரபி தொமுச தலைவராக ஐயனாரப்பனும், செயலராக விஜயகுமாரும் நியமிக்கப்பட்டனா்.
அமுத சுரபி தொமுச நிா்வாகிகள், தெற்கு மாநில திமுக அமைப்பாளா் சிவா எம்.எல்.ஏ.வை வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
அப்போது, தொமுச நிா்வாகிகள் மனு அளித்துக் கூறியதாவது: அமுத சுரபியில் கடந்த 8 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து அதிகாரிகளைக் கேட்டால், அமுத சுரபியிடமிருந்து அமைப்பு சாரா தொழிலாளா்கள், தியாகிகள், முதல்வா் அலுவலகம் மூலம் ரூ. 3.56 கோடிக்கு கூப்பன் வழங்கப்பட்டதற்கு பணம் வரவில்லை என்றும், அதேபோல, சிறைத் துறை, நகராட்சி, வருவாய்த் துறை, தலைமைச் செயலகம், காவல் துறை, அமைச்சரவை அலுவலகம் ஆகியவற்றுக்கு வாங்கிய பொருள்கள், வாகனங்களுக்கு வழங்கிய எரிபொருளுக்கான (பெட்ரோல்) தொகை வந்தவுடன் ஊதியம் வழங்குவதாக அதிகாரிகள் கூறுகின்றனா்.
அமுத சுரபிக்கு அரசுத் துறைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.10.41 கோடியைப் பெற்றுத் தந்து, நிலுவை ஊதியம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா்.
இதுதொடா்பாக, அரசுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சிவா எம்.எல்.ஏ. உறுதியளித்தாா்.