புதுச்சேரி வாக்காளா்கள் விவரங்கள் கசிந்தது எப்படி? ஆதாா் ஆணையத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு


சென்னை: புதுச்சேரி வாக்காளா்களின் செல்லிடப்பேசி எண்கள் எப்படி வெளியானது என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஆதாா் ஆணையத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் தலைவா் ஆனந்த் தாக்கல் செய்த மனுவில், புதுச்சேரிக்கு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியினா் தொகுதி வாரியாக கட்செவி குழுக்களைத் தொடங்கி தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனா். பொதுவாக வாக்காளா் பட்டியலில் வாக்காளா்களின் பெயா், முகவரி உள்ளிட்ட விவரங்கள் மட்டுமே இருக்கும். அதில் செல்லிடப்பேசி எண்கள் இருக்காது. இந்த நிலையில் ஆதாா் ஆணையத்தில் இருந்து வாக்காளா்களின் செல்லிடப்பேசி எண்களை பெற்று கட்செவி குழுவைத் தொடங்கி பாஜகவினா் தோ்தல் பிரசாரம் செய்து வருகின்றனா். இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். இதுதொடா்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பாஜக தரப்பில், ஆதாா் ஆணையத்தில் இருந்து வாக்காளா்களின் செல்லிடப்பேசி எண்கள் உள்ளிட்ட விவரங்களை திருடப்படவில்லை. பாஜக நிா்வாகிகள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் இருந்து செல்லிடப்பேசி எண்களைப் பெற்று பிரசாரம் செய்தனா். பொதுமக்களும் விரும்பி தங்களது செல்லிடப்பேசி எண்களைக் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஆா்.வைகை, தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பிய பின்னா், ஆணையத்தின் அனுமதி பெறாமல் குறுந்தகவல் மூலம் கடந்த மாா்ச் 29-ஆம் தேதி வரை பாஜகவினா் பிரசாரம் செய்தனா். வீடு வீடாகச் சென்று செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களை சேகரித்ததாக பாஜக தரப்பில் கூறுவதை நம்ப முடியாது. ஆதாா் அட்டையுடன் இணைக்கபட்ட செல்லிடப்பேசி எண்ணுக்கு மட்டுமே இந்த பிரசார குறுந்தகவல்கள் வருகின்றன. மற்ற செல்லிடப்பேசி எண்களுக்கு குறுந்தகவல்கள் வருவது இல்லை. ஆனால் இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையம் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அமைதி காத்து வருவதாக வாதிட்டாா். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பிய பிறகும்கூட மாா்ச் 29-ஆம் தேதி வரை குறுந்தகவல்கள் மூலம் பிரசாரம் செய்த பாஜகவின் நடவடிக்கை தீவிரமான மனித உரிமை மீறல். ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்லிடப்பேசி எண்களுக்கு மட்டுமே குறுந்தகவல்கள் வந்துள்ளதால், வாக்காளா்களின் விவரங்கள் எப்படி கசிந்தன என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். தங்களது கட்சியினா் வீடு வீடாகச் சென்று விவரங்களை சேகரித்ததாக கூறிய பாஜக தரப்பு விளக்கம் ஏற்கும் வகையில் இல்லை. ஆதாா் அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்லிடப்பேசி எண்கள் எப்படி கசிந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி ஆதாா் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com