புதுச்சேரியில் ஊழல் நாராயணசாமி அரசு ஊழல் மிகுந்ததாக இருந்தது என பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா திருநள்ளாறு பிரசாரத்தின்போது கூறினார்.
காரைக்காலுக்கு ஞாயிற்றுக்கிழமை ஹெலிகாப்டரில் வந்த அவர், திருநள்ளாறு தேரடி பகுதியில் அந்த தொகுதியின் பாஜக வேட்பாளர் ஜி.என்.எஸ்.ராஜசேகரனை ஆதரித்துப் பேசியது: புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சியை கருத்தில்கொண்டே பாஜக தகுதியான வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. கடந்த 5 ஆண்டுகள் நாராயணசாமி தலைமையிலான அரசு ஊழல் மிகுந்ததாக இருந்தது.
முற்றிலும் மக்களுக்கு பயனில்லாத அரசாகவே அது இருந்தது.
மாநிலத்தின் அனைத்துப் பிரிவினரும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக விவசாயிகள், இளைஞர்கள் உள்ளிட்ட தொழிலாளர் வர்க்கத்தினர் அரசால் பயனடையவே முடியவில்லை. ஊழல்வாதிகளால் இவர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.
நரேந்திர மோடி அமைச்சரவையில் நான் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, காரைக்காலில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரிக்கான அனுமதியை அளித்து, நிதியாதாரத்தை அளித்தேன். கடந்த 5 ஆண்டுகளாக நாராயணசாமி அரசின் ஒத்துழைப்பின்மையால் ஜிப்மர் கட்டுமானம் உள்ளிட்ட அதன் வளர்ச்சி பின்தங்கிய நிலையில் உள்ளது. இதற்கு புதுச்சேரியில் முதல்வராக இருந்த நாராயணசாமிதான் காரணம்.
மத்தியில் நரேந்திர மோடி அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு புதுவை, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், சுட்டுக்கொல்லப்படுவதுமாக இருந்தனர். மோடி அரசு பொறுப்புக்கு வந்த பின் ஒரு மீனவரைக்கூட சுடுவதற்கு இலங்கை கடற்படைக்கு தைரியம் வரவில்லை. இது பாஜக அரசின் வலிமையைக் காட்டுகிறது. மோடி அரசின் நடவடிக்கையால் இலங்கை சிறையிலிருந்த தமிழக, புதுவை மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
எனவே புதுச்சேரியில் பாஜக வேட்பாளர்கள் இத்தேர்தலில் வெற்றிபெறுவதன் மூலம் மாநிலத்தின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். அதை கருத்தில்கொண்டு பாஜகவுக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும். புதுச்சேரியில் தாமரையை மலரச் செய்யுங்கள் என்றார் அவர்.
மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், தேர்தல் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.