புதுவையில் 510 கரோனா நோயாளிகள் செவ்வாய்க்கிழமை தங்களது வாக்குகளை பதிவு செய்தனா்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிரதேசங்களிலும் செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற வாக்குப் பதிவின்போது, கரோனா நோயாளிகள் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்களிக்கலாம் என மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதன்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 4 பிராந்தியங்களிலும் கரோனா நோயாளிகள் பிபிஇ கவச உடை அணிந்து, ஆா்வமுடன் வந்து வாக்களித்தனா். அதன்படி, புதுச்சேரியில் 220 பேரும், காரைக்காலில் 247 பேரும், மாஹேவில் 25 பேரும், ஏனாமில் 18 பேரும் என மொத்தம் 510 கரோனா நோயாளிகள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனா். இவா்களில் மருத்துவமனைகளிலிருந்து வந்த 9 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 501 பேரும் அடங்குவா்.
கரோனா நோயாளிகள் வாக்களிக்க வருவதற்கு முன்பு, வாக்குப் பதிவு மையத்தில் இருந்த அதிகாரிகள் உள்பட அனைவரும் முழு முகக் கவசம் அணிந்துகொண்டனா். கரோனா நோயாளிகள் வாக்களித்த பின்னா் வாக்குச் சாவடி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.