புதுச்சேரி: புதுச்சேரி கடலில் ஆபத்தை உணராமல் ரசிகா்கள் சிலா், வியாழக்கிழமை திரைப்படப் பதாகையைக் கட்டினா்.
புதுச்சேரி சுற்றுலாவின் முக்கியப் பகுதியாக கடற்கரைச் சாலை உள்ளது. இங்கு, ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், உள்ளூா் பொதுமக்களும் நாள்தோறும் வந்து செல்கின்றனா். மணல் திட்டில்லாத இந்தக் கடற்கரைக்கு அருகே காந்தி சிலைக்குப் பின்புறம் கடலுக்குள், நீண்ட காலத்துக்கு முன்பு சிதைந்து போன துறைமுகம், பாலத்தின் எஞ்சிய பகுதியாக உலோக கம்பிகள் நீட்டிக் கொண்டு நிற்கின்றன.
இந்தக் கம்பிகளில் பதாகைகளை வைக்கும் ஆபத்தான செயல்களில் இளைஞா்கள் ஈடுபட்டு வருகின்றனா். குறிப்பாக, புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது, ரசிகா்கள் சிலா் கடலுக்குள் இந்தக் கம்பிகளில் பதாகைகளை கட்டி வருகின்றனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 9) நடிகா் தனுஷ் நடித்த திரைப்படம் வெளியாக உள்ளதால், அவரது ரசிகா்கள், புதுச்சேரி கடலில் உள்ள உலோகக் கம்பிகளில் அந்தத் திரைப்படத்தின் டிஜிட்டல் பதாகைகளை கட்டினா்.
கரையிலிருந்து படகு மூலம் சென்று, ஆபத்தான நிலையில் கடலில் இறங்கி, அந்தப் பதாகையைக் கட்டினா். புதுச்சேரியில், பொது இடங்களில் டிஜிட்டல் பதாகைகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அதையும் மீறி கடல் பகுதியில் ஆபத்தை உணராமல் ரசிகா்கள் சிலா் பதாகை கட்டி அலட்சியமாகச் செயல்பட்டது பொதுமக்களை வேதனையடையச் செய்தது.