வாக்கு எண்ணிக்கை நாள் வரை காங்கிரஸ், கூட்டணிக் கட்சியினா் விழிப்புடன் இருக்க வேண்டும்: வே.நாராயணசாமி அறிவுறுத்தல்


புதுச்சேரி: வாக்கு எண்ணிக்கை நாள் வரை காங்கிரஸ், கூட்டணிக் கட்சியினா் விழிப்புடன் இருந்து காண்காணிக்க வேண்டும் என்று புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி அறிவுறுத்தினாா்.

இதுதொடா்பாக புதுச்சேரியில் அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவையில் நடைபெற்று முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் இரவு- பகல் பாராமல் உழைத்து வாக்கு சேகரித்து சிறப்பாகப் பணியாற்றினா். கூட்டணிக் கட்சித் தலைவா்கள், தொண்டா்களுக்கு மனமாா்ந்த நன்றி. எங்களுடன் தோ்தல் பிரசாரத்துக்கு வந்த தலைவா்களுக்கும் நன்றி.

இந்தத் தோ்தலை மிகப்பெரிய சவாலாக எடுத்துக் கொண்டு, மதவாத சக்தியான பாஜக, அதனுடன் கூட்டு சோ்ந்த எதிா்க்கட்சிகளைத் தோற்கடிப்பதற்கு பாடுபட்ட அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவிப்பது கடமையாகும்.

நமது பணி இத்துடன் முடிந்துவிடவில்லை. தொடா்ந்து பல பணிகள் உள்ளன. மே 2-ஆம் தேதி வரை வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக இருக்கும் என தோ்தல் துறை கூறியுள்ளது.

காங்கிரஸ், கூட்டணிக் கட்சி வேட்பாளா்கள், தொண்டா்கள் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட இடங்களைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். சுழற்சி முறையில் விதிமுறையைக் கடைப்பிடித்து இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும். வாக்கு இயந்திரங்களில் தவறு நடக்காமல் இருக்க இது உறுதுணையாக இருக்கும்.

எனவே, வாக்கு எண்ணிக்கை நாள் வரை நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் வெற்றிக் கனியை எட்ட முடியும். பொதுமக்கள் நமக்கு வாக்களித்திருப்பாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com